‘மத நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும் வரை போராடுவோம்!’- சுரேஷ்கோபி

சிந்து ஆர்
கலை

பாரம்பர்யம், கலாசாரம், மத நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும்வரை போராடவும் தயாராகவுள்ளோம் என சுரேஷ்கோபி எம்.பி. தெரிவித்தார்.

நவராத்திரி பூஜைக்காக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை மற்றும் குமாரகோயில் முருகன், பத்மநாபபுரம் சரஸ்வதி தேவி உள்ளிட்ட தெய்வங்கள் திருவனந்தபுரத்துக்கு எழுந்தருளுவது வழக்கம்.

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சியில் நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபி கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சபரிமலை தீர்ப்பு குறித்து நான் கருத்து எதுவும் கூறமுடியாது. தீர்ப்பு விஷயத்தில் கூறுவதற்கு எதுவும் இல்லை, செய்வதற்கு நிறைய உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது வேறு, மத நம்பிக்கை என்பது வேறு. நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். பாரம்பர்யம், கலாசாரம், மத நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும்வரை போராடவும் தயாராகவுள்ளோம். போராட்டத்தில் முன் நிற்கவும் தயாராக உள்ளேன். சபரிமலை விவகாரத்தில் அரசியல் ரீதியிலான கருத்துக் கூற விரும்பவில்லை" என்றார். பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சரஸ்வதி தேவி திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி நாளை காலை நடைபெற உள்ளது.