`அதிருப்தியுடன் பதவியேற்கும் கும்மனம் ராஜசேகரன்!' - மிசோரம் மாநில ஆளுநராகத் தொடர்ந்து நீடிப்பாரா?

சிந்து ஆர்
அரசியல்

மிசோரம் மாநிலக் கவர்னராக நாளை பதவி ஏற்க இருக்கும் கேரள பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜசேகரன் அதிருப்தியில் இருப்பதால் கவர்னராகத் தொடர்ந்து நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கேரள மாநில பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜசேகரன் மிசோரம், மாநிலக் கவர்னராக நியமித்து ஜனாதிபதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் கவர்னர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை எனவும், மக்களோடு மக்களாக இணைந்த பணி செய்யவே விருப்பம் எனவும் கும்மனம் ராஜசேகரன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும், டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்து தனது நிலைப்பாடு குறித்து விளக்கியுள்ளார் கும்மனம் ராஜசேகரன். அதேவேளையில் ஜனாதிபதி உத்தரவை மதிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மிசோரம் கவர்னராக இருக்கும் நிர்பய் சர்மாவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால், நாளை காலை 11 மணியளவில் புதிய கவர்னராகக் கும்மனம் ராஜசேகரன் பதவியேற்கிறார். ஜனாதிபதியின் அறிவிப்பை மதிக்கும் விதமாகக் கவர்னராகப் பதவியேற்க சம்மதம் தெரிவித்துள்ள கும்மனம் ராஜசேகரன், தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பது சந்தேகம் எனக் கேரள பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர். கேரள மாநில பா.ஜ.க-வின் ஆலோசனையைக் கேட்காமலே மத்திய தலைமை இதுபோன்று பல நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.