ஜாக்டோ - ஜியோ நடத்தும் கோட்டை முற்றுகைப் போராட்டம்! - ஆசிரியர்கள் சங்கம் புதிய முடிவு

பாலஜோதி.ரா
போராட்டம்

ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ள கோட்டை முற்றுகைப் போராட்டத்தில், சங்கத்தின் சார்பில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் புதிய முடிவு எடுத்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட அவசர செயற்குழுக்கூட்டம்,  புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மாவட்டத் தலைவர் சி.முத்துச்சாமி தலைமையில் நடந்தது. மாவட்ட மகளிரணித் தலைவி எம்.நாகலெட்சுமி , மாநில சட்ட ஆலோசகர் க.ராஜா, கல்வி மாவட்டத் தலைவர் நாடிமுத்து, கல்வி மாவட்டச் செயலர்கள் செந்தில்குமார், தனபால்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்  ஆ.மணிகண்டன், மாநில துணைத்தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர்,  கோட்டை  முற்றுகைப் போராட்டத்தை மாநில அமைப்பு முன்னெடுத்துள்ளதன் காரணம் குறித்து விளக்கிப் பேசினர். மாவட்டச் செயலாளர் எம்.ராஜாங்கம் அனைவரையும் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் மு.முத்துக்குமார் வேலை அறிக்கையை முன் வைத்தார்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ரமேஷ்குமார் தீர்மானங்களை  முன்மொழிந்தார், பலகட்ட போராட்டங்களை அறிவித்து, நீதிமன்றம் அறிவுறுத்திய பின்பும் போராடுபவர்களை அழைத்துப் பேசாத தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,  ஜாக்டோ-ஜியோவின் மாநில அமைப்பின் தீர்மானத்தின்படி சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் மே மாதம் 8-ம் தேதி, சென்னையில் நடக்கும் கோட்டை முற்றுகைப்  போராட்டத்தில் கலந்துகொள்வது, வரும் கல்வி ஆண்டு முதல் மதிய உணவின்றி வளரும் பருவத்தில் பட்டினியோடு மாணவர்கள் கல்வி கற்கும் நிலையைப் போக்கும் வகையில், பத்தாம் வகுப்பு வரை வழங்கப்படும்  சத்துணவுத்திட்டத்தை   பதினொன்றாம் வகுப்பு மற்றும்  பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி வழங்கிட அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையின் வண்ணத்தை மாற்றி அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பது, அனைத்து மாணவர்களுக்கும் உரிய அளவுகளுடன் அவர்களே தைத்துக்கொள்ள வழிவகை செய்வதோடு, 1-ம் வகுப்பு முதல்  12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் விலையில்லாமல் வழங்கிட வேண்டும் .

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடவும் , ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி நடந்த போராட்டங்களை கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசும் , மாநில அரசும் செய்திட வேண்டும்.

ஆண்டுதோறும் பணி நிரவலை நடத்தி ஆசிரியர்களை அலைக்கழிக்காமல், இந்த ஆண்டு  கைவிட வேண்டும். மேலும், தொடக்கக்கல்வி  மற்றும் பள்ளிக்கல்வி அலகுகளில்  புதிய நியமனங்களைச் செய்வதோடு, குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை மூடுவதையும் அரசு கைவிட வேண்டும்''  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக,  மாநில செயற்குழு உறுப்பினர்  சி.முகேஷ், மாவட்டத் துணைத்தலைவர் தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் , கல்வி மாவட்டச் செய்தித்தொடர்பாளர் மாரீஸ்வரன் , மாவட்டப் பொறுப்பாளர்கள் முருகராஜ், தவமணி ஜோதிபாசு, பால்ராஜ், கருணாகரன் , பாபு சிவராம்,பழனிசாமி  உள்ளிட்ட ஆசிரியர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினர்.   இறுதியாக பொருளாளர் ஆர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.