இரும்புக்கம்பி உடையும் அளவுக்கு யானையை தாக்கிய பாகன்கள்!

எம்.குமரேசன்
அரசியல்

ரும்புக் கம்பி உடையும் அளவுக்கு யானையை பாகன்கள் அடித்து துன்புறுத்திய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு அருகேயுள்ள கண்ணம்பத்தூர் கிராமத்துக்கு அனுப் சந்திரன் என்பவரின் வளர்ப்பு யானையை பாகன்கள் அழைத்துவந்துள்ளனர். யானையைக் குளிக்க அழைத்துச் சென்றபோது, பாகன்களின் சொல்லுக்கு அது கட்டுப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாகன்கள்  யானையை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கினர். மூன்று பாகன்களும் சுற்றிச் சுற்றி யானையை அடிக்க வலி தாங்காமல் யானை பிளிறியுள்ளது.

எனினும் பாகன்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதை அடித்தனர். அடித்த வேகத்தில் இரும்புக் கம்பி இரு துண்டுகளாக உடைந்து போனது. பாகன்கள் அடித்ததில் யானையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பாகன்கள் இரக்கமற்ற செயலை,  செல்போனில் வீடியோவாக எடுத்த ஒருவர் வனத்துறைக்கு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து,  வனத்துறையினர் பாகன்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கேரளாவில் வளர்ப்பு யானைகளை பாகன்கள் துன்புறுத்துவதாக புகார் எழுவது வாடிக்கையாகி வருகிறது. 

யானையை பாகன்கள் தாக்கும் வீடியோவை மலையாள மனோரமா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.