தினகரன் அணியில் இருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்!

சிந்து ஆர்
அரசியல்

தினகரன் அணியில் செயல்பட்டுவந்த நாஞ்சில் சம்பத், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க-வில் பிரசார பீரங்கியாக இருந்த நாஞ்சில் சம்பத், பின்னர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். பொதுக்கூட்ட மேடைகளில் முழங்கிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணியுடன் பிணங்கினார். ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர், மீண்டும் சசிகலா அணியில் இணைந்தவர், தினகரன் ஆதரவாளராக உருவெடுத்தார். 

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றிபெற்ற பின்னர், பல மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தினார். அந்தக் கூட்டங்களில்  நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளாமல் இருந்துவந்தார். இந்த நிலையில், தினகரன் அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேற இருப்பதாக கடந்த சில நாள்களாகத் தகவல் பரவியது.

இதற்கிடையில், தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி உள்ளிட்டோர், கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு நேற்று வந்தனர். அவருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நாஞ்சில் சம்பத் தினகரன் அணியில் தொடருவார் எனத் தெரிவித்தார். 

இந்த நிலையில், இன்று காலை மணக்காவிளையில் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த நாஞ்சில் சம்பத், தினகரனின் செயல்பாடுகள் திராவிடக் கொள்கைக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் தினகரன் அணியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். இனி, இலக்கிய மேடைகளில் பேச இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்,  ’திராவிடத்தை அழிக்கும் விதமாக தினகரன் செயல்படுகிறார். திராவிடம் இல்லாத தமிழகம் என்ற திட்டத்துடன் இயங்கும் வகுப்புவாத சக்திகளுக்கு தினகரன் அடிபணிந்துவிட்டார் என்ற சந்தேகம் இருக்கிறது. இனி நான் அரசியலில் ஈடுபடபோவதில்லை. ஒரு தலைவன் ஒரு கொடிக்கு கீழே இருக்க  விரும்பவில்லை. இளைஞர்களுக்காக தமிழ் பயிற்சி பட்டறை துவங்க போகிறேன்’ என்றார்

கடந்த 15 -ம் தேதி, மதுரை மேலூரில், ’அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பை தினகரன் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.