ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா?  ‘மிஸ்டர்’ பவ்யத்தின் மறுபக்கம்! - அத்தியாயம் 1

Vikatan Correspondent
அரசியல்

ஜெயலலிதாவிடம் ‘மிஸ்டர்’ விசுவாசம்.... சசிகலாவிடம் ‘மிஸ்டர்’ நம்பிக்கை... அமைச்சரவை சகாக்களிடம் ‘மிஸ்டர்’ பவ்யம்... அதிகாரிகள் மட்டத்தில் ‘மிஸ்டர்’ ஓ.பி.எஸ்... தமிழக மக்களிடம் ‘மிஸ்டர்’ பொம்மை... ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ‘மிஸ்டர்’ மிக்சர்... பன்னீர் செல்வத்தின் கடந்த காலம் பெற்றுத்தந்த அடுக்கடுக்கான பட்டங்கள் இவை. ஏறத்தாழ 17 ஆண்டுகளாக, இந்தப் பட்டங்களை விரும்பியும் விரும்பாமலும் சுமந்து திரிந்தார் பன்னீர் செல்வம். ஆனால், 40 நிமிட தியானம்... வெறும் நாற்பதே நிமிட தியானம்; 20 நிமிடப் பேட்டி... வெறும் இருபதே நிமிடப் பேட்டியில் 17 ஆண்டு காலமாக தான் மீது வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பட்டங்களை உடைத்து நொறுக்கி இருக்கிறார் பேச்சிமுத்து என்ற ஓ.பன்னீர் செல்வம் என்ற ஓ.பி.எஸ். இப்போது அவர் ‘மிஸ்டர்’ பரிசுத்தம் என்று பட்டத்தோடு வலம் வர ஆரம்பித்துள்ளார். குறிப்பிட்ட ஊடகங்கள் அவரை அப்படிக் காட்டுகின்றன. ‘ஐ சப்போர்ட் ஓ.பி.எஸ்’ என்ற ஹேஷ்டேக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. நாளுக்குநாள் அவர்களுக்கான பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கூடிக்கொண்டே போகின்றனர். 

சசிகலா கெட்டவர்... அதனால், ஓ.பி.எஸ் நல்லவரா?

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் காபந்து அரசாங்கம், நிலைத்தன்மை இல்லாத அரசியல், தலைமைக்கு வந்துள்ள தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அசாதாரண சூழல் ஒன்று தமிழகத்தைச் சூழ்ந்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், ‘பன்னீர் செல்வம் உத்தமர்’ என்று கட்டமைக்கிறவர்கள், ‘ஐ சப்போர்ட் ஓ.பி.எஸ்’ என்று ஹேஷ்டேக் போடுபவர்கள், அவற்றை அப்படியே நம்புபவர்கள்... என்று யாரிடமும்  உண்மையிலேயே பன்னீர் செல்வம் உத்தமரா? என்ற கேள்விக்கு உறுதியான பதில் இல்லை; பதில் தெரியவும் இல்லை. ‘சசிகலா கெட்டவர்... அதனால், பன்னீர் நல்லவர்...’ என்ற தெளிவில்லாத மனநிலைதான் உள்ளது. பன்னீர் செல்வத்தின் அரசியல் பிரவேசம், அரசியலில் அதிகாரத்தை அடைய அவர் செய்த தந்திரங்கள், அதிகாரத்தை அடைந்தபிறகு அவர் செய்த சாகசங்கள், நிகழ்காலத்தில் அவர் எழுப்பி இருக்கும் உரிமைக்குரலுக்கான நிஜப் பின்னணி, இப்போது அவர் ஆரம்பித்திருக்கும் இருக்கும் கலகத்தின் தெளிவான உள்நோக்கம் ஆகியவற்றை குறுக்கு வெட்டாகத் தெரிந்து கொள்வதன் மூலமே பன்னீர் செல்வம் உத்தமரா? அல்லது அவரும் குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒன்றா? என்ற உண்மையை உணர்ந்துகொள்ள முடியும். 

கடைக்கோடி கரைவேட்டித் தொண்டன் அல்ல!

அ.தி.மு.க என்ற கட்சியை ஜெயலலிதா எப்படி நடத்தினார் என்பதை தமிழகம் அறியும். ‘மாற்றுக் கருத்து’ என்ற வார்த்தைக்கே அந்த கட்சி அகராதியில் இடமில்லை; அப்படியொரு சர்வாதிகரம் அங்கு கொடிகட்டிப் பறந்தது. ஜெயலலிதா தரையில் நடந்தாலும் சரி... ஹெலிஹாப்டரில் பறந்தாலும் சரி... தொண்டர்களும் அமைச்சர்களும் குனிந்து நின்று ஜெயலலிதாவை கும்பிட வேண்டும் என்பது அங்கு அடிப்படைப் பயிற்சி; அப்படியொரு அடிமைபுத்தி அந்தக் கட்சியில் புகுத்தப்பட்டு இருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசினாலும் சரி... சட்டமன்றத்தில் பதில் சொன்னாலும் சரி... ‘மாண்புமிகு-இதயதெய்வம்-புரட்சித் தலைவி-அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு மூச்சு உச்சரிக்க வேண்டும்; அப்படியொரு போலி விசுவாசம் அந்தக் கட்சியில் வளர்க்கப்பட்டது. ஊழல், முறைகேடு வழக்குகளில் சிக்கி அந்தக் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் இரண்டுமுறை சிறைக்குச் சென்றார்; இரண்டுமுறை முதலமைச்சர் பொறுப்பை இழந்தார். அந்தளவுக்கு அந்த கட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. இவ்வளவு கறைபடிந்த வரலாற்றைக் கொண்ட கட்சியில், பன்னீர் செல்வம்,  கரைவேட்டி உடுத்தும் வெறும்  கடைக்கோடித் தொண்டன் மட்டுமல்ல... மூன்றுமுறை மூத்த அமைச்சராக இருந்தார்; 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்தக் கட்சியின் பொருளாளர் பொறுப்பு வகித்தார்; மூன்று முறை அந்தக் கட்சியின் சார்பில் முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பாவங்களில் பன்னீருக்குப் பங்கு இல்லையா? 

அ.தி.மு.க என்ற மிகப்பெரிய கட்சியில், 17 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப்பொறுப்புகளோடு வலம் வந்த பன்னீர் செல்வம், அந்தக்

கட்சியின் தலைமையால் நடத்தப்பட்ட முறைகேடுகளில் முக்கியப் பங்குதாரராக இருந்தாரா, இல்லையா? வருவாய்த்துறை, நிதித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை தன்வசம் வைத்திருந்த பன்னீர் செல்வம் அங்கு நடந்த ஊழல்களுக்கு முக்கியக் காரணகர்த்தாவாகத் திகழ்ந்தாரா, இல்லையா? பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா, மகன் ரவீந்திரநாத்தின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பன்னீர் செல்வம் அடித்தளம் அமைத்தாரா? இல்லையா? கரூர் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற ரெய்டுக்கும் பன்னீருக்கும் சம்பந்தம் இருந்ததா, இல்லையா? தமிழகத்தின் மணல் குத்தகையை மொத்தமாக சேகர்ரெட்டிக்கு தாரைவார்த்து, தமிழகத்தின் ஆறுகளை கூறுபோட பன்னீர் செல்வம் உதவினாரா, இல்லையா?  அதற்கு சேகர் ரெட்டியிடம் இருந்து பன்னீர் செல்வம் கைகளுக்கு கரன்சிகள் கடத்தப்பட்டதா, இல்லையா? தேனியில் பால் பண்ணையும், டீக்கடையும் வைத்திருந்த பன்னீர் செல்வத்தின் இன்றைய சொத்து மதிப்பு 15 ஆயிரம் கோடிகளா? இல்லையா? 

ஜெயலலிதா உடல் ஆரோக்கியத்துடன் முதல் அமைச்சராக இருந்தபோதே, ‘எனக்குச் சுயமரியாதை முக்கியம்’ என்று காரசாரமாகப் பேட்டி கொடுத்த பழ.கருப்பையாவும், சசிகலாவை எதிர்த்து பேட்டி கொடுக்கும் பன்னீர் செல்வமும் சரிநிகர் சமமா, இல்லையா? 2016 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதா, இல்லையா? அதில் இருவரும் வசமாகச் சிக்கினார்களா, இல்லையா? அதற்குப் பிறகு பன்னீரையும், நத்தம் விஸ்வநாதனையும் போயஸ் கார்டனில் வைத்து சசிகலா  உருட்டுக் கட்டைகளின் உதவியோடு விசாரணை நடத்தினாரா, இல்லையா? ஜெயலலிதா இறந்த பிறகு, மதுசூதனனை மறைத்து சசிகலாவை பொதுச் செயலாளராகக் கொண்டு வந்ததில் பன்னீர் செல்வத்துக்கு பங்கு இருந்ததா, இல்லையா? போயஸ் தோட்டத்தில் வைத்து, ‘முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்யுங்கள்’ என்று டாக்டர் வெங்கடேஷூம் டி.டி.வி.தினகரனும் பன்னீர் சொல்வத்தை மிரட்டியபோது, ‘துணை முதலமைச்சர் பதவியாவது கொடுங்கள்’ என்று பன்னீர் செல்வம் கேட்டாரா? இல்லையா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலைத் தெரிந்துகொள்வதன் மூலமே உண்மையில் ஓ.பி.எஸ் உத்தமரா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள பன்னீரின் கடந்த காலத்துக்குள் கொஞ்சம் பயணம் செய்ய வேண்டும்; செய்வோம்!

பயணம் தொடங்குகிறது... 

ஜோ.ஸ்டாலின். 
படங்கள் - ப.சரவண குமார், மீ.நிவேதன்.